கொஞ்சும் மைனாக்களே...கொஞ்சும் மைனாக்களே...

எனக்கு கனவுகள் மிகப் பிடித்தவை. கவிதைகள் அதை விட. கனவில் வரும் கவிதை இந்தப் பாடல்; கவிதையில் வரும் கனவு இந்தப் பாடல். ஏதோ எதுகை மோனையோடு எழுதுவதற்காய் சொல்வதாக நினைக்க வேண்டாம். உண்மை அதுவே.

இந்தப் பாடலின் இசையும் கவிதையும் கனவுகளை உயிர்ப்பித்திருக்கும். சமீப காலமாக தமிழ்த்திரை இசையில் கவிதைகளுக்கான தட்டுப்பாடு நாம் அறிந்த ஒன்றே. நல்ல வார்த்தைகளை நசுக்கும் இசையும், நல்ல இசையை நசுக்கும் வார்த்தைகளும் நேற்றை விட இன்று சற்றே அதிகம். அந்த வகையில் இது ஒரு அருமையான பாடல். அழகான இசையும், ஆழமான கவிதையும் சேர்ந்து கனவுகளை கதையாகச் சொல்லும் பாடல். ரஹ்மான் அவர்களின் மிகச்சிறந்த பாடல்களில் இது குறிப்பிடத்தக்க ஒன்று என்றே கருதுகிறேன்.



கொஞ்சும் மைனாக்களே...கொஞ்சும் மைனாக்களே...
என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள்...

அட இன்றே வரவேண்டும் என் தீபாவளிப் பண்டிகை...
நாளை வெறும் கனவு, அதை நான் ஏன் நம்பனும்?
நான் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்...


பகலில் ஒரு வெண்ணிலா...பகலில் ஒரு வெண்ணிலா வந்தால் பாவமோ?
இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா?

விடை சொல் சொல் சொல்...மனசுக்குள் ஜல் ஜல் ஜல்..
விடை சொல் சொல் சொல்...மனசுக்குள் ஜல் ஜல் ஜல்..

கொஞ்சம் ஆசை, கொஞ்சம் கனவு, இவை இல்லாமல் வாழ்க்கையா?
நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா?

கனவே கை சேர வா...


இந்த வரிகளில் கவிஞர் தன் கனவுகளை அள்ளி இரைத்திருப்பார். பகலில் ஒரு வெண்ணிலாவும், இரவில் ஒரு வானவில்லும் வரவேண்டும் என்று சொல்லி நிறுத்திக் கொள்ளாமல், அவை வந்தால் என்ன குற்றம் என்று கூடக் கேட்டிருப்பார். கொஞ்சம் ஆசையும் கனவும் இல்லாமல் வாழ்க்கை என்ன வாழ்க்கை என்று கூறியிருந்தாலும் அந்த வரிகளுக்கு முன்னமே, நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும் என்று கேட்கிறார். கவிதையின் கரு அந்த இடத்தில் தான் விதைக்கப் பட்டிருக்கிறது.

எந்த ஒரு எழுத்தாளனும், கவிஞனும் தன்னுடைய எழுத்தின் கருவை, ரகசியத்தின் திறவுகோலை ஒரு வரியிலோ அல்லது ஒரு வார்த்தையிலோ அடக்கியிருப்பான். அதைக் கண்டுகொண்டால் நீ அறிந்தவனாகி விடுவாய் என்று என் குரு அடிக்கடி சொல்லுவார். அந்த விதை இந்தப் பாடலில் இந்த வரியில்தான் இருப்பதாக எண்ணுகிறேன்.

"நாளை வெறும் கனவு அதை நான் ஏன் நம்பனும்?"

இந்தச் சாவியை வைத்து நீங்கள் மொத்தப் பாடலையும் திறந்து பாருங்கள், கவிஞரின் கனவு உங்களுக்கும் நனவாகும்.


(கொஞ்சும் மைனாக்களே..)

என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும்
எனக்கேற்ற மாதிரி பருவம் மாறட்டும்

பரதம் தம் தம் தம்
மனசுக்குள் தாம் தோம் தீம்

பரதம் தாம் தாம் தாம்
மனசுக்குள் தாம் தோம் தீம்

பூங்காற்றைக் கொஞ்சம் கிழித்து
எங்கள் முக வேர்வை போக்கிடும்
நாளை என்பது கடவுளுக்கு
இன்று என்பது மனிதருக்கு
வாழ்வே வாழ்பவர்க்கு.

இந்தப் பாடலை உற்று கவனிக்கும் போது, ஒரு விஷயம் தென்படுகிறது. இந்தப் பாடலில், ஐஸ்வர்யா ரய் தவிர மற்ற துணை நடிகர்கள் எல்லோரும் முகமூடியுடன்தான் இருக்கிறார்கள். காரணம் ஒன்றுமில்லாமல் கூட இருக்கலாம், ஆனால் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.


2 comments:

Matangi Mawley said...

you shouldn't have shared the key! :)

i m guessing it was the same lyricist who wrote:

"kavithai variyin suvai, artham puriyum varai".. :)

good write-up!

Yu Yu said...

ohh I love this song and its meaning too. thanks for posting and yr review. :-)